ஈரோடு: ஈரோட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து குடும்ப செலவிற்காக பயன்படுத்திய தாயை மகன்களே அடித்து கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் வ.உ.சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சரோஜாவை 2 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அவரது மகன்கள் விக்னேஷ் மற்றும் அருண்குமார் கொலை செய்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் வீட்டில் இருந்த இருவரும் அங்கு வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தேடி உள்ளனர்.
அப்போது பணம் இல்லாததால் தாய் சரோஜாவிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு சரோஜா வீட்டு செலவிற்காக அந்த பணத்தை செலவு செய்ததாக கூறியுள்ளார். இதனால் தாய்-மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் அருண்குமார் இரும்பு கம்பியை எடுத்து சரோஜாவை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த சரோஜாவை மகன்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.