×

ஈரோட்டில் ரூ.2000 பணத்திற்காக தாயை அடித்து கொன்ற மகன்கள்...!! குடிக்க வைத்திருந்ததை எடுத்து செலவு செய்ததால் ஆத்திரம்!!!

ஈரோடு:  ஈரோட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து குடும்ப செலவிற்காக பயன்படுத்திய தாயை மகன்களே அடித்து கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் வ.உ.சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சரோஜாவை 2 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அவரது மகன்கள் விக்னேஷ் மற்றும் அருண்குமார் கொலை செய்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் வீட்டில் இருந்த இருவரும் அங்கு வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தேடி உள்ளனர்.

அப்போது பணம் இல்லாததால் தாய் சரோஜாவிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு சரோஜா வீட்டு செலவிற்காக அந்த பணத்தை செலவு செய்ததாக கூறியுள்ளார். இதனால் தாய்-மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் அருண்குமார் இரும்பு கம்பியை எடுத்து சரோஜாவை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த சரோஜாவை மகன்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.

அதன்பிறகு சரோஜா குறித்த விவரம் தெரியாததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சிலர் ஈரோடு தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், குடிக்க வைத்திருந்த பணத்தை எடுத்து குடும்ப செலவு செய்ததால் தாயை அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் கொலையை மறைக்க ஆம்புலன்சில் கொண்டு சென்று மயானத்தில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரோஜாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் மகன்களே தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sons ,death , mother beaten to death,Erode
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி