பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே, பிலிகுண்டுலு வனப்பகுதியில் குட்டிகளுடன் 20 யானைகள் முகாமிட்டுள்ளன. இதையடுத்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல், கோடுப்பட்டி, சின்னாறு வனப்பகுதிகளில் செடி,கொடிகள் செழித்து வளர்ந்து பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே நீர் நிலைகளில் தண்ணீரும் தேங்கியுள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டு வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட யானைகள், தங்களது குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒகேனக்கல்-பென்னாகரம் சாலையோரங்களில் அவ்வப்போது வந்து, அங்குள்ள இலை, தழைகளை சாப்பிட்டபடி சாவகாசமாக சுற்றித்திரிகின்றன.