ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இரு வீடுகளுக்கிடையே உள்ள சுவர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டேல் தெருவை சேர்ந்த துரைராஜ் மற்றும் பாலகரசு என்பவர்களது வீட்டிற்கு இடையிலான சுவர் பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதில் கடந்தாண்டு துரைராஜ் என்பவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, துரைராஜூவுக்கும், பாலுகரசுவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் பாலுகரசு ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் துரைராஜ் மற்றும் அவரது மகன் கூடலிங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற கூடலிங்கம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இளைஞரின் கொலை தொடர்பாக ஜல்லி முருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். சுவர் பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, உயிரிழந்த கூடலிங்கத்திற்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.