இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை விறுவிறு...பிற்பகல் முன்னணி நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு..!!

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. பிற்பகல் முதல் முன்னணி நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை இருந்தது. அதற்குள் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 55 சதவீத வாக்குகள் பதிவாகின. 12,985 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

பிற்பகல் முதல் முன்னணி நிலவரம் வெளியாகும் என்று தெரிகிறது. முழுமையான முடிவுகள் வெளியாக நாளை ஆகும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்ததாவது, இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சில இடங்களில் 71 முதல் 75 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாகும் என்றார்.

தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பிரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைக்ரி பால சிறிசேனாவின் சுதந்திர கட்சி என 4 முக்கிய கட்சிகள் களம் காண்டுள்ளன. 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சை இயக்கங்களை சேர்ந்த 7,200 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

Related Stories: