சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4084 கவுரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ.15,000ல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு வாழ்வாதாரமின்றி சிரமப்படும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான ஊதியத்தை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மூன்று மாதங்களுக்கான ஊதியத்தையும் உடனடியாக வழங்கிட தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கும் முதல்வர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.