ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி இளம் வழக்கறிஞர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுதாகர், நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய மாநில அரசுகள் மற்றும் நீதித்துறை ஆகியவை வழக்கறிஞர்கள் சங்கங்களோடு ஆலோசனை செய்து தனி மனித இடைவெளி மற்றும் முககவசம் அணிந்தபடி நீதிமன்றத்தை நடத்திடவேண்டும். மத்திய-மாநில அரசுகள் தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து வழக்கறிஞர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.