புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 67.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், இறப்பு சதவீதமும் 2.09 ஆக குறைந்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,08,254 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 52,509 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 39,795 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 857 பேர் இறந்துள்ளனர்.
இவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 300 பேர் இறந்துள்ளனர். 12,82,215 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 67.19 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு சதவீதம் 2.09 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,86,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 7வது நாளாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2,14,84,402 பேரின் மாதிரிகள் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 6,19,652 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.