புதுடெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பின்னணியில் பாலிவுட்டில் நிலவும் வாரிசு கலாசார ஆதிக்கம் இருப்பதாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே, அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், பாலிவுட் நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்ரவர்த்ததி மீது சந்தேகம் இருப்பதாகவும், மகனின் பல கோடிகளை சுருட்டி விட்டதாகவும் புகார் செய்தார்.