புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்தாண்டு நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், டெல்லியை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா ஷெரான் தேசிய அளவில் 93வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐஸ்வர்யா ராய் போல் மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்பதற்காக என் அம்மா எனக்கு ஐஸ்வர்யா என பெயர் சூட்டினார். மிஸ் இந்தியா போட்டியில் நான் 21 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு பெற்றேன். மாடலிங்கில் இருந்தாலும், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு. அதற்காக மாடலிங்குக்கு கொஞ்சம் பிரேக் விட்டு படிக்க ஆரம்பித்தேன். எந்த கோச்சிங் கிளாசிலும் சேரவில்லை. வீட்டிலேயே படித்தேன். மொபைல் போன், சோஷியல் மீடியா பக்கமே போகவில்லை. அதன் பலன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். படிப்பின் மீது எனக்கொன்றும் திடீர் ஆர்வம் ஏற்பட்டுவிடவில்லை. சிறு வயதில் இருந்தே நான் படிப்பில் படுசுட்டி . இவ்வாறு அவர் கூறி உள்ளார்.