அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி, வேத மந்திரங்கள் முழங்க கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் நடந்த விழாவில் பேசிய அவர், ‘‘இந்த கோயிலுக்காக நூற்றாண்டு காலம் காத்திருந்தது முடிவுக்கு வந்துள்ளது,’’ என்றார். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி அனுமதி வழங்கியது. அதன் உத்தரவுப்படி, கோயில் கட்டுவதற்காக அரசியல் சார்பற்ற ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் சார்பில், கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ராம ஜென்ம பூமியில் 67 ஏக்கரில் 10 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்கள், ராஜ கோபுரம் என நாகரா கட்டிட பணி கலையில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்ட திட்டம் வகுக்கப்பட்டது.
இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். கொரோனா பாதிப்பால், சாதுக்கள், ராமர் கோயில் கட்டுவதற்காக 30 ஆண்டாக போராடியவர்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவில் பங்கேற்றனர்.
அடிக்கல் நாட்டு விழாவுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அனைத்து வீடுகள், கடைகள் மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் ஜொலித்தன. முக்கிய சாலைகளில் மரிக்கொழுந்து பூக்கள் தோரணத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்கப்பட்டனர். ராமர் கோயில் மாதிரிகள் வரையப்பட்டு, குழந்தை ராமரின் படங்கள் சுவர்களில் வரையப்பட்டிருந்தன. ராம ஜென்ம பூமிக்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடியும், ஆதித்யாநாத்தும் அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று அனுமனிடம் ஆசீர்வாதம் பெற்று திரும்பினர்.
பின்னர், ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை நடக்கும் மேடைக்கு பிரதமர் வந்தார். அவருடன் ஆதித்யநாத், உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகந்த் நிருத்திய கோபால் தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். அனைவரும் முகக்கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அடிக்கல் நாட்டும் இடத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜையை நடத்தினர். பின்னர், வேதமந்திரங்கள் முழங்க, கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். அப்போது, அரங்கில் இருந்த அனைவரும் ‘பாரத் மாதா கி ஜே’, ஜெய் ராம்’ என விண் அதிர கோஷமிட்டனர்.
இந்த பூமி பூஜை மந்திரங்கள் நகரமெங்கும் ஒலிக்கும் வகையில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் பஜனைகள் நடைபெற்றன. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் டிவி, இணையதளங்கள் மூலமாக பூமி பூஜையை நேரடியாக கண்டுகளித்தனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் பூமி பூஜை நடந்த சமயத்தில் வீடுகளில் ராமரை பூஜித்து வழிபட்டனர். அங்குள்ள பல இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா
மட்டுமின்றி அமெரிக்காவிலும் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு பூமி பூஜை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூமி பூஜையைத் தொடர்ந்து, ராமர் கோயில் கட்டும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற 30 ஆண்டுகால வாக்குறுதியை பாஜ நிறைவேற்றி உள்ளது.
பூமி பூஜையை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘ஜெய் சியா ராம்’ எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசுகையில், ‘‘தற்காலிக குடிசையில் பல ஆண்டாக வாழ்ந்த குழந்தை ராமருக்கான பிரமாண்ட கோயிலை கட்ட உள்ளோம். ராமர் கோயிலுக்காக பலரும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். ராமர் எங்கும் உள்ளார். அனைவருக்குமானவர் அவர். ஒட்டுமொத்த மனித இனத்திற்கு உத்வேகம் அளிக்கும் இக்கோயில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அயோத்தியின் பொன்னான பக்கங்களை இந்தியா உருவாக்கி இருக்கிறது. சகோதரத்துவம், பரஸ்பர அன்புடன் அனைவரும் தந்த கற்களின் மூலம் கட்டப்படும் இக்கோயிலின் மூலம் நூற்றாண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது’’ என்றார்.
பலத்த பாதுகாப்பு
* பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றதால், அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
* பிரதமருக்கான எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு படையினர் கோயிலை சுற்றியும், வீடுகளின் மேற்கூரைகளிலும் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் சீலிடப்பட்டன.
* நூறு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
* விழா நடந்த கோயில் வளாகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.
* சாலைகளின் குறுக்கே கால்நடைகள் குறுக்கிடுவதை தடுக்க 500 பேரை மாவட்ட நிர்வாகம் பணி அமர்த்தி இருந்தது.
* ராமர் கோயில் - ஒரு பிரமாண்டம்
கட்டுமான பொருள்
கற்கள்: ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து கொண்டு வரப்படும். இவை, ‘கற்களின் ராஜா’ என்ற பெருமைக்குரியவை. ராமர் கோயில் கட்டுவதற்கான நாடு முழுவதிலும் இருந்து அனுப்பப்பட்ட லட்சக்கணக்கான செங்கற்களும் பயன்படுத்தப்படும்.
* கட்டிட வடிவமைப்பு
கோயில் கட்டுமானத்தில் இரும்பு சுத்தமாக பயன்படுத்தப்படாது. கட்டிடத்தின் மேற்கூரைகள், சுவர்கள், கட்டமைப்புகள் அனைத்தும், பளுவை தாங்கும் வகையில் அடித்தளத்தில் இருந்தே கற்களால் எழுப்பப்படும்.
எண்ணிக்கை ஒரு நாளில் 80,000 முதல் 1 லட்சம் பேர் தரிசிக்க முடியும். கட்டுமான இலக்கு மூன்றரை ஆண்டில் கட்டி முடிக்க திட்டம்
* தரை
முழுவதும் விலை உயர்ந்த, தரமிக்க மார்பிள் கற்களால் அமைக்கப்படும்.
* தரைத்தளம்
கருவறை அமைக்கப்படும். நிகழ்ச்சிகள் நடக்கும் மேடைகளுடன் 3 மண்டபங்கள் இடம் பெறும்.
* முதல் தளம்
ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் சிலைகளுடன் பிரமாண்ட மண்டபமாக இருக்கும்.
* 2ம் தளம்