திருச்சி ரயில்வே பணிமனையில் வட மாநிலங்களை சேர்ந்த 500 பேர் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக கூறி போராட்டம்

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தொழில்நுட்ப பிரிவில் ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 500 பேர் புதிதாக பணி நியமனத்திற்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி பொன்மலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கொரோனா பொது முடக்க காலத்தில் திடீரென நடைபெறும் நியமனத்தில் முறைகேடு இருப்பதாக கூறி அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நேற்றும் இன்றும் நடத்தினர். அப்ரண்டிஸ் முடித்தோரின் போராட்டத்தையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறுத்தப்பட்டது. பணி நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் ரயில்வே நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. கடந்த 2018ம் ஆண்டு 584 பணியிடங்களுக்காக நடைபெற்ற ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத்தான் தற்போது நியமனம் நடைபெறுவதாக தெரிகிறது. இத்தேர்வைப் போலவே நியமனமும் வெளிப்படையாக நடக்கவில்லை.

ரயில்வே அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர் சங்க ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் தமிழ்நாட்டினர் பலர் தேர்வு எழுதியும் பெயரளவிற்கு கூட தேர்வு செய்யப்படாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ரயில்வேயில் ஆள் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான நடவடிக்கை ஒரு பக்கம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வட மாநிலத்தவர்களுக்காக ரகசிய பணி நியமனம் நடைபெறுகிறதோ என்கிற சந்தேகமும் எழுவதாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

Related Stories: