நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை தொடர்கிறது; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

நீலகிரி: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டுவதால் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கூடலூர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளைப்பருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

நள்ளிரவு முதல் மழையுடன் கடுமையாக காற்றும் வீசி வருவதால் அங்கங்கே சாலைகளில் மின்கம்பங்களும், மரங்களுக்கும் முறிந்து விழுந்துள்ளன. இன்று காலை உதகை பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் லாரி மீது மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. மின்சார வினியோகம் தடைப்பட்டிருப்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரி மீது விழுந்த மின்கம்பத்தை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும் வெள்ளத்தில் சிக்கிக் குடியிருப்புகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் இடிந்துள்ளன. உதகையில் மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தில் சிக்கித்தவித்த பழங்குடியினர் கிராம மக்களை மீட்புப்படையினர் காப்பாற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வனச்சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான உதகை - கூடலூர் சாலையில் காற்றுடன் பெய்த கனமழையால் இன்று காலை மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மிக கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; வரும் 8 ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் தொடர் மழையால் குடியிருப்புகளை இழந்தவர்களைத் தங்கவைப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பு முகாம்கள் அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: