×

திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கு தண்ணீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

களக்காடு: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளம் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரியகுளங்களில் ஒன்றாக திகழும் இந்த குளத்திற்கு திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும்  கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் குளம் தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து வெயில் கொளுத்தியதால் குளத்திற்கு தண்ணீர் வரத்து தடைபட்டது. ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழையும் பொய்த்து போனதால் 4 மாதங்களாக குளம் வற்றி வறண்டு காட்சி அளித்தது.

இதனிடையே கடந்த இரு நாட்களாக திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பெரியகுளத்திற்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. தண்ணீர் வரும் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை விவசாயிகள் அகற்றினர். 4 மாதத்திற்கு பின் குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை நீடித்தால் இன்னும் ஒரு சில வாரங்களில் குளம் நிரம்பும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Thirukurungudi Periyakulam: Farmers , Water ,supply , Thirukurungudi, Periyakulam,
× RELATED விவசாயி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!