முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி : செங்கல்பட்டு SRM மருத்துவமனையில் நாளை 2ம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை!!

சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளை கோவாக்சின் 2ம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது. ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு ‘கோவாக்சின்’ (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து  கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு  தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்தது.

கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த தடுப்பூசியை  மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா உட்பட  நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன் படி கடந்த மாதம் 23ம் தேதி காட்டாங்குளத்தூர் SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் நாளை 2ம் கட்ட கோவாக்சின் பரிசோதனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததால், இரண்டாம் கட்ட பரிசோதனை நாளை 2 பேருக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: