திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாக ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 மாதங்களில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கங்களை கடத்தியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தங்கக்கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு ஸ்வப்னா தாக்கல் செய்த மனு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது என்.ஐ.ஏ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்.ஐ.ஏ. விசாரணை குழு தாக்கல் செய்த எதிர் மனுவில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.