கேரள தங்கக்கடத்தல் வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!: மூன்று மாதங்களில் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியது அம்பலம்..!!

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாக ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 மாதங்களில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கங்களை கடத்தியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தங்கக்கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு ஸ்வப்னா தாக்கல் செய்த மனு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது என்.ஐ.ஏ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. என்.ஐ.ஏ. விசாரணை குழு தாக்கல் செய்த எதிர் மனுவில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

சரித் குமார், ஸ்வப்னா சுரேஷ், பைசல் பரீத், சந்திப் நாயர், ரமீஸ் ஆகியோர் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 20 முறை தங்கக்கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 200 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது என்று என்.ஐ.ஏ. மனுவில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை குழு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஸ்வப்னாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனிடையே தங்கக்கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த சரபுதீன், ஷாபிக் ஆகியோரை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 4 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: