500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அயோத்தியில் ராமர் கோயில்: 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!!!

அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை அமைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச  நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வந்தது. ராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோயில் மாதிரி  வரைபடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் கட்டப்படுகின்றது. கோயில் கட்டுமான பணிகளை  தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடத்த அறக்கட்டளை திட்டமிட்டது. இதன்படி, பிரதமர்  நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.

ராம ஜென்மபூமி அறக்கட்டளை அழைப்பினை ஏற்ற பிரதமர் மோடி, இன்று காலை 9.30 மணியளவில்  டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் புறப்பட்டார். தொடர்ந்து. 10.30 மணியளவில் லக்னோ விமான நிலையம்  வந்தடைந்தார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியில் விழா நடக்கும் இடத்திற்கு அருகே ஹெலிபேட்  தளத்தில் 11.30 மணியளவில் தரையிறங்கினார். அங்கு, பிரதமர் மோடிக்கு தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு  வரவேற்பு அளிக்கப்பட்டது. 29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அயோத்திக்கு  வந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

அயோத்தி வந்தவுடன் முதலில் அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று அனுமனுக்கு தீப ஆராதனை செய்து பிரதமர்  மோடி, வழிபாடு செய்தார். அனுமன் கோவிலில் பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம், சால்வை அணிவிக்கப்பட்டது.  பின்னர், 12 மணியளவில் ராம பூமியில் குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரையில் விழுந்தும், தீப  ஆராதனை செய்தும் தரிசனம் செய்தார். மேலும் ராமஜென்ம பூமி வளாகத்தில் பாரிஜாத பூ செடியை நட்டு  வைத்தார்.

இதனை தொடர்ந்து, 12.15 மணயளவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா தொடங்கியது. அடிக்கல்  நாட்டு விழா குறிப்பிட்ட தாமிர பட்டயத்திற்கும், வெள்ளியால் ஆன செங்கற்களுக்கும் புனித மந்திரங்கள் முழங்க  பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, 12.45 மணியளவில் 40 கிலோ வெள்ளி செங்கல்லை நிறுவி, கட்டுமான பணிக்கு அடிக்கல்  நாட்டினார். விழாவில் கலந்து கொள்வதற்கு சாமியார்கள் 135 பேர் மற்றும் விஐபி.க்கள் உட்பட 175 நபர்கள்  மட்டுமே பங்கேற்றனர்.

எனினும் விழா மேடையில் பிரதமர் மோடி, உபி ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ்  தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத், மகந்த் நிருத்திய கோபால்தாஸ் ஆகியோர் மட்டுமே  இருந்தார்கள். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடியின் அருகில் வருவதற்கு  குருக்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கிடையே, உத்தரப்பிரதேச அரசு சார்பில் கோயிலின்  உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்படுகிறது. அனைத்து நிகழ்வுகளையும் முடித்து பிரதமர் மோடி 2  மணியளவில் டெல்லி திரும்புகிறார்.

Related Stories: