நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடித்த விபத்து!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு..!!

சென்னை: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தின் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த மாதம் 1ம் தேதி காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5வது அலகில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர். தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி வெவ்வேறு நாட்களில் உயிரிழந்த நிலையில், 34 நாட்கள் சிகிச்சை பலனளிக்காமல் ரவிசந்திரன் என்ற பொறியாளர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 3 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் இதுவரை 2 இளநிலை பொறியாளர், 10 ஒப்பந்த தொழிலாளர்கள், 2 நிரந்தர தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: