ஹூஸ்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலம், சின்ந்திரியை சேர்ந்தவர் சர்மிஸ்தா சென்(43). இவர் திருமணத்துக்கு பின் அமெரிக்காவின் பிளானோ பகுதிக்கு சென்று குடியேறினார். இவர் ஒரு மருந்து தயாரிப்பாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி சர்மிஸ்தா நடைபயிற்சி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், சிஸ்லோம் டிரையல் பூங்கா அருகே சர்மிஸ்தாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து பலமுறை தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொலை நடந்த அதே நேரத்தில் அந்த பகுதியில் கொள்ளை சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, சர்மிஸ்தாவின் கொலைக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.