×

மைனஸ் 30 டிகிரி வரை உறைய வைக்கும் லடாக் குளிரில் இருந்து வீரர்களை பாதுகாக்க ஆர்க்டிக் கூடாரங்கள்: போர்க்கால அடிப்படையில் அமைப்பு

புதுடெல்லி: சீன ராணுவத்தை எதிர்கொள்வதற்காக லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்களை பனி, குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக, ‘ஆர்க்டிக்’ பனிப் பிரதேசத்தில் அமைக்கப்படுவது போன்ற பிரத்யேக கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி ஊருடுவ முயன்ற சீன ராணுவ வீரர்களை தடுத்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது முதல் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இருதரப்பிலும் எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், பிரச்னையை தீர்க்க ராணுவ, தூதரக ரீதியாக பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இதில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து மட்டுமே சீன ராணுவம் வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.

ஆனால், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுக்கு சொந்தமான பாங்காங்க் திசோ ஏரி பகுதியில் சீனா தொடர்ந்து படைகளையும், ஆயுதங்களையும் குவித்து கொண்டு இருக்கிறது. குளிர்காலத்தில் இந்த பகுதிகளில் மைனஸ் 30 டிகிரி வரை குளிர் நிலவும். எனவே, அதை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு சீனா திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால்,  லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள வீரர்களை, பிரச்னை முடியும் வரையில் அங்கேயே முகாமிட்டு இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இங்கு 40 ஆயிரம் இந்திய வீரர்கள் உள்ளனர்.

எனவே, இவர்களுக்காக குளிரை தாங்கும் உடைகள், உணவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வீரர்கள் தங்குவதற்காக ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் அமைக்கப்படுவது போன்ற அதிநவீன கூடாரங்களும் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. பாங்காங்க் திசோவில் பிங்கர் 4 முதல் பிங்கர் 8 வரையிலான 8 கிமீ தூரத்தை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது. அங்கிருந்து வெளியேற அது மறுத்து வருகிறது. ஆனால், அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதற்கு தாமதமானாலும், அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வகை கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு உடைகள், ஆயுதம் கொள்முதல்
* ஆர்க்டிக் கூடாரங்களுக்குள் குளிர் நுழையாது. அது, வீரர்களுக்கு கதகதப்பான வெப்பத்தை அளிக்கும்.
* லடாக்கில் வீரர்களுக்கு வெந்நீர் அளிப்பதற்காக பிரமாண்ட கொதிகலன் அமைக்கப்படுகின்றன.
* டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் போன்றவை பெருமளவில் சேமிக்கப்படுகின்றன.
* வீரர்களுக்கு தேவையான குளிர்கால சிறப்பு உடைகள், கையுறைகள், பூட்ஸ், சாக்ஸ் உட்பட 4 பொருட்களை வாங்க, வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன் ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளது.
* முழுநீள ஜாக்கெட், கால்சட்டைகள், போர்த்திக் கொண்டு உறங்குவதற்கான பட்டுக்கூடு போன்ற பைகள் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
* இஸ்ரேலிடம் இருந்து வான்வெளி பாதுகாப்பு ஆயுதங்கள், சிறிய ரக டிரோன்கள், அமெரிக்காவிடம் இருந்து மலைகளில் பயன்படுத்தப்படும் பீரங்கி ஆயுதங்கள், 72 ஆயிரம் எஸ்ஐஜி ரக துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன.

Tags : soldiers ,Ladakh , Ladakh, freezing up to minus 30 degrees, to protect soldiers, Arctic tents, wartime base, structure
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து