கை சிதைந்த தூய்மை பணியாளரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மக்கும் குப்பைகளை பிரிக்கும்போது தூய்மை பணியாளர் கை சிதைந்த நிலையில், அவருக்கான மருத்துவ செலவு முழுவதும் அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கீழ வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி பாக்கியலெட்சமி என்பவர் சுய உதவிக்குழுவின் மூலம் தூய்மைப் பணியாளராக திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்தில் கடந்த 28ம் தேதி நுண் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கைசிக்கி முற்றிலும் சிதைந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.

பாக்கியலெட்சமி வலது கை சிதைந்தது பற்றிய விவரங்கள் எனது கவனத்திற்குத் தெரிய வந்தவுடன், இவருக்கு தீவிர உயர் சிகிச்சை அளிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நான் உத்தரவிட்டேன். தமிழக அரசு, பாக்கியலெட்சுமி ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது மருத்துவ செலவு முழுவதும் அரசே ஏற்கும். மேலும் சிறப்பினமாக இவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: