×

தனியார், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் எஸ்.சி., எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிலுவையை உடனே சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு தருமாறு உத்தரவிட கோரி கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க தலைவர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்க கூடிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அந்த மாணவர்களின் கல்வி கட்டணமாக சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தரப்படும்.

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு முதல் அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தவில்லை. தற்போது வரை அந்த தொகை நிலுவையில் உள்ளது. எனவே உடனடியாக நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டும். இது போல கல்வி கட்டணத்தை திருப்பித் தருவதற்கான கால நிர்ணயம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

Tags : institutions ,government ,SC ,iCourt , Private, Government Aid, Education, Studying SC, SD Student, Scholarship, Case, Government, Icord
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா