ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தற்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 10க்கும் மேற்பட்ட குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் ஸ்ரீபெரும்புதூரை சுற்றி ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி உள்ளனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிக்க, குடிநீர் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.