திருவள்ளூர்: காக்களூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கேசவன், தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சந்திரன், ஜி.ரவிச்சந்திரன், வெங்கடேசன், கந்தவேல் உள்பட 50 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஊழியர்களுக்கு கிருமி நாசினி, முக கவசம், கையுறை மற்றும் தெர்மல் இயந்திரம் போன்ற பாதுகாப்பு கருவிகளை வழங்கிட வேண்டும். இ.எஸ்.ஐ திட்டத்தில் சேர்த்திட வேண்டும், மதுபான பாட்டில்களில் உள்ள பழைய விலையை அகற்றிவிட்டு புதிய விலை லேபிளை ஒட்ட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.