ராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: சாமியார்கள், விஐபிக்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை அமைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோயில் மாதிரி வரைபடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் கட்டப்படுகின்றது.

கோயில் கட்டுமான பணிகளை தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் பயன்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறப்பு ஸ்தலங்களில் இருந்து புனித நீர் மற்றும் புனித மண் எடுக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதலே இங்கு யாகங்கள் மற்றும் பல்வேறு பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றது. 12 சாதுக்கள் இந்த பூஜைகளை நடத்தி வருகின்றனர். அயோத்தி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், மஞ்சள் நிற வண்ணத்தில் ராமாயணத்தில் இடம்பெறும் முக்கியமானவர்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ராமர் மற்றும் சீதையின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது.

கோயிலுக்கு செல்லும் வழியில் இருபக்கத்திலும் உள்ள சுவர்களிலும் ராமாயண பாத்திரங்களே இடம் பெற்றுள்ளன. அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி வருகிறார். முதலில் அனுமன் கர்கி கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு வழிபாடு செய்த பின்னர் ராம ஜென்மபூமிக்கு செல்கிறார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடியின் அருகில் வருவதற்கு குருக்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளி செங்கல்லை நிறுவி, கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவில் கலந்து கொள்வதற்கு சாமியார்கள் 135 பேர் மற்றும் விஐபி.க்கள் உட்பட 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் விழா மேடையில் பிரதமர் மோடி, உபி ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத், மகந்த் நிருத்திய கோபால்தாஸ் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள். தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் விழாவில் கடைப்பிடிக்கப்படும்.  விழா மற்றும் பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘‘முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வழிகள் டிரோன் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று இல்லாதவர்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி நகர எல்லைகள் மூடப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. விழாவில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள். பொதுமக்கள் பூமி பூஜையை காண்பதற்காக ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைக்காட்சிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மக்கள் வீடுகளில் இருந்தே இதனை கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது,’’ என்றார்.

விழாவை முன்னிட்டு இன்று வீடுகளில் விளக்கேற்றவும் பாஜ அழைப்பு விடுத்துள்ளது.

* தபால் தலை வெளியீடு

ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும். தொடர்ந்து 12.40 மணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். தொடர்ந்து 2 மணி வரை பூஜை நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி புறப்படுகிறார். உத்தரப்பிரதேச அரசு சார்பில் கோயிலின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்படுகிறது. கோயில் வளாகத்தில் பாரிஜாத பூ செடியை பிரதமர் மோடி நடுகிறார்.

* அமெரிக்காவிலும் சிறப்பு பூஜைகள்

அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பூமி பூஜை நடைபெறும் நேரத்தில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துகின்றனர். அங்குள்ள கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் பகுதியில் பிரம்மாண்ட பலகைகள் வைக்கப்படுவதோடு ராமரின் புகைப்படங்கள், பூமி பூஜை படங்கள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்படுகின்றது.

* ஒற்றுமையின் அடையாளம்

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் கட்டுமான பணி தொடக்க விழா குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல யுகங்களாக ராமரின் சிறப்புகள், இந்திய துணை கண்டத்தின் ஒற்றுமைக்கு ஆதாரமாக இருந்துள்ளது. ராமாயணம், நாகரீகத்தின் அழியாத அடையாளம். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் விழாவானது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

* அயோத்தி சர்ச்சையும், வழக்கின் முடிவும்...

1528: ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில், மொகலாயப் பேரரசின் முதல் அரசர் பாபரின் படைத் தளபதி மீர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1853: மசூதி கட்டப்பட்ட இடத்தில் நடந்த இந்து- முஸ்லிம் கலவரத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1949: ராமர் - சீதை சிலைகள் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கோயில் வளாகத்தை அரசு மூடியது.

1984: ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ராமஜென்ம பூமி இயக்கத்தைத் தொடங்கியது.

1986: பிப் 1: இந்து மக்கள் பூஜை செய்வதற்காக கோயில் வளாகத்தை திறக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தியதால், நாட்டின் பல பகுதிகளில் இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண, பாபர் மசூதி கமிட்டியை அரசு அமைத்தது.

1989: ஜூலை 10: அலகாபாத்தின் உயர்நீதிமன்றக் கிளையான லக்னோ நீதிமன்றம், ராமர் கோயில் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பைசாபாத் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. நவ. 9: சர்ச்சைக்குரிய இடத்தில் கோயிலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

1990: ராமர் கோயில் கட்டும் கோரிக்கையை வலியுறுத்தி, சோம்நாத்தில் இருந்து அயோத்தியை நோக்கி பாஜ தலைவர் எல்.கே அத்வானி ரதயாத்திரை தொடங்கினார். ஆனால், பீகாரில் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

1992: டிச.6: கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

2003: நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், மசூதியின் அடியில் ஏற்கனவே கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2005: சர்ச்சைக்குரிய இடத்தில் வெடிகுண்டு நிரம்பிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

2010: செப்.30: சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம்லாலா அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2011: மே 9: இந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2019: ஆக.6: ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அயோத்தி வழக்கை 40 நாட்கள் தொடர்ந்து விசாரிக்கத் தொடங்கியது. நவ. 9: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளித்தது.

2020: பிப். 5: ராமர் கோயில் கட்டுவதற்கான ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்கிறது.

புதிதாக கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் பிரமாண்ட தோற்றம்: 67 ஏக்கரில் கோயில்

* அயோத்தில் ராமர் கோயில் வளாகம் 67 ஏக்கரில் அமைகிறது.

* கோயில் மட்டுமே 10 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.

* வடமாநில பாணியில் கோயில் கட்டப்படுகிறது.

* கோயிலின் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும்.

* கோயிலில் 5 மண்டபங்கள், ஒரு ராஜகோபுரம் அமைக்கப்படுகிறது.

* கோயிலில் அமைக்கப்பட உள்ள படிக்கட்டுக்கள் 16 அடி அகலம் கொண்டவையாக இருக்கும்

* முதலில் கர்ப்பகிரக மண்டபம், கூட மண்டபம், ரிருத்திய மண்டபம் கட்டுவதற்கு மட்டுமே திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 3 மண்டபங்கள் அமைக்கப்படுகிறது. இவை கீர்த்தன மண்டபம், ரங் மண்டபம், பிரார்த்தனை மண்டபம் என பெயரிடப்பட்டுள்ளது.

* வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பாக ஷில்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கோயில் 3 தளங்களாகவும், 360 தூண்கள் கொண்டதாகவும் அமைக்கப்படுகின்றது. முதல் தளத்தில் 160 தூண்கள், 2வது தளத்தில் 132 தூண்கள், 3வது தளத்தில் 72 தூண்களும் அமைக்கப்படுகின்றது.

* ஏற்கனவே இருந்த கோயில் வடிவமைப்பை அடிப்படையாக வைத்தே புது கோயிலும் அமைக்கப்படுகின்றது.

* கருவறை எண்கோண வடிவில் உருவாக்கப்படுகிறது.

* ராமர் கோயில் வளாகத்தில் கூடுதலாக மேலும் 4 சிறு கோயில்கள் அமைக்கப்பட உள்ளது.

* ராமர் கோயில் வடிவமைப்பாளரின் பெயர் சந்திரகாந்த் சோம்புரா. குஜராத்தை சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் தான் சோம்நாத் கோயிலை வடிவமைத்தனர்.

* கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் ராஜஸ்தானின் வன்சி மலையில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றது.

* 30 ஆண்டுகளாக ஏராளமான செங்கற்கள் ராமர் கோயில் கட்டுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அந்தந்த மொழிகளில் ஸ்ரீராம் என எழுதப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் செங்கற்கள் கோயில் அமையவுள்ள இடத்தில் குவித்து  வைக்கப்பட்டுள்ளது. இவையும் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும்.

* கோயில் கட்டுமான பணி முடிய 3 முதல் மூன்றரை ஆண்டுகளாகும்.

Related Stories: