ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரயில் பாதை கிராசிங் உள்ளது. இதில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகாலம் நடந்த பணி முடிவடைந்து கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. ரங்கப்பாதையில் ரயில்வே கிராசிங் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், ரயில் ஸ்டேஷன், நகராட்சி அலுவலகம் செல்லும் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் செல்வர்.

சிறிய அளவில் மழை பெய்தாலே சுமார் நான்கடி உயரத்திற்கு சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நீர் வெளியேற வழி அமைக்காமல் உள்ளதால் தொடர்ந்து பல நாட்களுக்கு நீர் தேங்குகிறது. சிவகங்கை அருகே சூரக்குளம் மற்றும் காரைக்குடி, மானாமதுரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளிலும் இதே நிலை உள்ளது. சுரங்கப்பாதையின் கீழே சிமென்ட் தளம் உள்ளதால் நீர் உறிஞ்சப்படுவதற்கும் வழி இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிடைந்து வருகின்றனர். சுரங்கப்பாதை பகுதியில் இந்த ஒரு வழியை தவிர மாற்று வழி இல்லாததால் செய்வதறியாது மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘நீர் வெளியேற வழியில்லாமல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. சிறியமழை பெய்தாலே பல நாட்கள் நீர் தேங்குகிறது. எப்படி இந்த வழியே செல்ல முடியும். உடனடியாக நீரை அகற்றவும், மழைநீர் நிரந்தரமாக வெளியேற தேவையான மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: