திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது: கொரோனா காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு திரும்பப்பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல அவர்கள் வெற்றி பெறாத பாடங்களுக்கான அரியர் தேர்வுகளும் நடைபெறும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் இருந்து தொடர்ந்து ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருப்பதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் பள்ளி பொதுத் தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளன. அதோடு, கல்லுரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற தேர்வுகளை அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு காரணமாக தேர்வு நடத்தப்படுவதாகவும், ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள், சகஜ நிலை திரும்பியபின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வுகளை எழுதி கொள்ளலாம் என்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.