பெரியகுளம்: பெரியகுளம் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பகுதியில் வராகநதி ஆற்றில் வேகான் ஓடைப்பகுதியில் தரைப்பாலம் உள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த தரைப்பாலம் கடும் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக விளைபொருட்களை ஏற்றி செல்லும் விவசாயிகள் சிரமத்தித்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பாலத்தை சீரமைக்க கோரி அப்பகுதிவிவசாயிகள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும்நிலையில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் முற்றிலும் சேதமடையும் நிலை உள்ளது. இதனால் தரைப்பாலத்தின் வழியாக விளைபொருட்களை எடுத்து செல்வது தடங்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.