நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக : தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!!

சென்னை : நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை.

திறந்த நீதிமன்ற விசாரணைக்கும் அனுமதி தரவில்லை. இதனால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்று தொழில் செய்து வருமானம் இழந்து தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் மேலும் சிரமத்திற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

 கொரோனா தொற்று மற்றும் தொடர் ஊரடங்கு காரணமாக சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் தலைகீழாக மாறி இதற்கு முன்னெப்போதும் கண்டிராத சூழ்நிலையில் மக்கள் வாழ வேண்டிய கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலையில்லாமலும், வருமானம் இல்லாமலும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர்களும் விதிவிலக்கு அல்ல.

எனவே, நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வேலையிழந்த வழக்கறிஞர்கள், தமிழக அரசு தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ரூபாய் 50 கோடி நிதி வழங்கி, பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞர்களுக்கு கொரோனா கால நிதி உதவி செய்திட வேண்டும்; மத்திய அரசு வட்டியில்லாமல் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5 அன்று நீதிமன்றங்கள் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தவுள்ளனர்.வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மேற்கண்ட போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிப்பதோடு, இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: