பாபநாசம் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது: கார் சாகுபடிக்கு நாளை தண்ணீர் திறப்பு

வி.கே.புரம்: பாபநாசம் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது. இதனால் நாளை (5ம் தேதி) கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 59.40 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 61.90 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 1836.92 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 454.75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.72.93 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 77.03 அடியானது. மணிமுத்தாறு அணை 62.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 18 கனஅடி நீர் வருகிறது. 56 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறில் 10.23 அடியாகவும், கொடுமுடியாறு 15 அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடனா அணை 42 அடியாகவும், ராமநதி அணை 59 அடியாகவும், கருப்பாநதி 33.74 அடியாகவும், குண்டாறு 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை 82 அடியாகவும் உள்ளது. பாபநாசத்தில் 60 அடியை தாண்டினால் கார் பருவத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று  அரசு உறுதியளித்து உள்ளதால் நாளை (5ம் தேதி) பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழை தொடர்ந்தால் அணையில் இருந்து வழக்கம்போல் தண்ணீர் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கார் பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென ஏற்கனவே விவசாயிகள், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்ைப தொகுதி எம்எல்ஏ முருகையா பாண்டியனும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்: பாபநாசம்- 8 மிமீ, சேர்வலாறு- 7, மணிமுத்தாறு -3.4, கொடுமுடியாறு- 5, தென்காசி- 5.4, செங்கோட்டை- 14, ஆய்க்குடி- 1.4, கடனா- 3, ராமநதி- 5, கருப்பாநதி- 6, குண்டாறு- 28, அடவிநயினார் அணை- 17 மிமீ.

Related Stories: