வீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மீளும் வரை வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களை வாடகை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று மாநில அரசு பல முறை கூறியுள்ளது. ஆனால், பல இடங்களில் வாடகை கேட்டு தொந்தரவு அளிக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளது. இந்த நிலையில், சென்னை புழல் அருகே உள்ள விநாயகபுரத்தில் சீனிவாசன்(42) என்பவர் வசித்து வந்தார். பெயிண்டர் வேலை செய்துவந்த இவருக்கு கொரோனா பொது முடக்கத்தால் வருமானம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சீனிவாசன் வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் அப்பகுதி அரசியல் நிர்வாகி ஆவார். வாடகைதாரர் சீனிவாசன் வாடகை தராததால் வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் புழல் போலீசாரை அணுகினார்.

இதையடுத்து, புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பென்சாம் சனிக்கிழமை சீனிவாசனின் வீட்டுக்கு சென்று அங்கே சீனிவசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அன்று இரவுக்குள்ளேயே வாடகை தந்துவிடவேண்டும் என்று எச்சரித்துள்ளார். வாடகை தர பணத்தை ஏற்பாடு செய்ய முடியாத சீனிவாசன் இரவு 11 மணி அளவில் வீட்டில் தீக்குளித்தார். 90 சதவீத தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீக்குளித்து உயிரிழந்த சீனிவாசன் இறப்பதற்கு முன்பு, வாக்குமூலம் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதால் இன்ஸ்பெக்டர் பென்சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பெயிண்டர் தற்கொலை செய்து  விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்விகாரம் குறித்து, சென்னை காவல் ஆணையர் 4 வாரத்தில் விளக்கம் தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: