யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்து சாதனை!!

டெல்லி : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பாக செயல்படுகிறது. தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை பணி நியமனம் செய்து வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது.எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. இதனிடையே கொரோனா காலக்கட்டத்தால் நேர்காணலில் தாமதம் ஏற்பட்டு, நேற்று முன் தினம் வரை இந்த நேர்காணல் நடந்து முடிந்தது.

இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டது.  www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனிடையே யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் (மெயின்) தேர்வில் பிரதீப் சிங் முதலிடத்தையும், ஜதின் கிஷோர், பிரதிபா வர்மா, ஹிமான்ஷு ஜெயின், ஜெய்தேவ் சி எஸ், விசாகா யாதவ், கணேஷ் குமார் பாஸ்கர், அபிஷேக் சரஃப், ரவி ஜெயின் மற்றும் சஞ்சித் மொஹாபத்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்து உள்ளனர்.ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் பயிற்சி மையம் எதிலும் சேராமல் ஆன்லைன் மூலம் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.பிரியங்கா 68வது இடம், முருகானந்தம் 119வது இடம், கார்த்திகேயன் 136வது இடத்தைப் பிடித்துள்ளனர்.சங்கீதா, விபு கிருஷ்ணா, அபிநயா ஆகியோரும் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories: