காதல் திருமணம் செய்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்!: மாமனாரே மருமகனை கொலை செய்தது விசாரணையில் அம்பலம்..!!

தருமபுரி: தருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மாமனாரே மருமகனை அடித்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்த 12 படித்த விஜய்யே கொலை செய்யப்பட்டவர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பொறியியல் படித்த வந்த மாணவி ராஜேஸ்வரியை அவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாமனார் முனிராஜ் தனக்கு சொந்தமான மாங்காய் மண்டிக்கு வருமாறு விஜய்க்கு கடந்த 1ம் தேதி அழைப்பு விடுத்தார். மாமனாரை பார்க்க சென்ற விஜய் கும்மனூர் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனார் மற்றும் அவரது உறவினர்கள் என 6 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாமனார் தரப்பினரே மருமகனை தலையில் இருப்பு கம்பியால் அடித்து கொன்று விபத்து நடந்ததை போன்று நாடகமாடியது தெரியவந்தது. சரக்கு வாகனத்தில் உடலை மறைத்து அதன் மீது தக்காளி பெட்டிகளை அடுக்கி எடுத்து சென்று சடலத்தை வீசி உள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞர் ஏழ்மையானவர் என்பதால் இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மாமனார் முனிராஜ், அவரது உறவினர்கள் வீரமணி, சித்துராஜ், மஹாலிங்கம் உள்ளிட்ட 4 பேரை பிடித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தியதில் விஜய் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து முனிராஜ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

Related Stories: