சென்னை: மாணவர்கள் கூடுதல் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும், அதனை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை நேற்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதில் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கை வருத்தத்தை தருகிறது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், புதிய கல்வி கொள்கை, ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை உலக தரத்திலான கல்வியை வழங்க இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிலையங்கள் என கல்வித்துறையின் அனைத்து பிரிவுகளும் மேம்பட இருக்கின்றன. தாய்மொழிக்கல்வி கட்டாயம் என்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். புதிய கல்வி தமிழ்நாட்டிற்கு மட்டுமானது அல்ல. ஹிந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.