ஈரோடு: பெருந்துறை மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், நர்சுகளுக்கு சம்பளம் வழங்குவதில் இழுபறி நீடிப்பதாக அவர்கள் குமுறலுடன் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் என 370 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா சிறப்பு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுழற்சி முறையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் மாதந்தோறும் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், டாக்டர்கள், நர்சுகள் பரிதவித்து வருகின்றனர்.
இது குறித்து டாக்டர்கள், நர்சுகள் கூறியதாவது: கடந்த மாதம் 13ம் தேதி சம்பளம் கிடைத்தது. இதனால் அபராதத்துடன் இ.எம்.ஐ. கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மாதமும் அதே நிலை நீடிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு சம்பளம் கூட முறையாக வழங்கப்படாமல் உள்ளது. கை தட்டியும், விளக்கேற்றியும் பாராட்டும் தமிழக அரசு உரிய காலத்தில் ஊதியம் கொடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.