மனநலம் பாதிக்கப்பட்டு திரிபவர்களை அரசு காப்பகங்களில் சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகங்களில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்ற வக்கீல் கற்பகம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தற்போது பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றி வருகிறார்கள். அதில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளது. ஆனால், அவர்களுக்கு போதிய உணவும் தங்குமிடமும் இல்லை. எனவே, தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து  முகாம்களுக்கு அனுப்பி சரி செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதாஅடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரபாகரன் தொடர்பாக தினகரன் நாளிதழில் வந்த செய்தியும் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

அவர் வாதிடும்போது, பழனி மலையை சுற்றி பல்வேறு மனநலம் பாதித்தவர்கள் சுற்றித் திரிகிறார்கள் என்று தினகரனில் செய்தி வந்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர், ‘‘ தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து அந்த பகுதியில் உள்ள மனநலம் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுதொடர்பான அறிக்கையை வருகிற 18ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: