வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க கூடாது என தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு: மனுதாரருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய் தடுப்பு அவசரகால சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. ஆனால், பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை வசூல் செய்துள்ளனர். ஆகவே, பெருந்தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று  குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு இது சாத்தியமில்லை என்றும், இதேபோல தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.மேலும், அரசினுடைய அறிவிப்பு தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது.  வழக்கை தள்ளுபடி செய்ய உள்ளோம். மனுதாரருக்கு அபராதமும் விதிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இதையடுத்து வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: