சமூக இடைவெளி பிரச்னையால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்றால் டாஸ்மாக்கை ஏன் மூடக்கூடாது? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சமூக இடைவெளி பிரச்னை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்தபோது, அப்படியானால் ஏன் டாஸ்மாக்கை மூட அரசு  கொள்கை முடிவு எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள அம்மா உணவகங்களிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில்  வக்கீல் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்திருந்தார். வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வக்கீல், தற்போது ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் அவர்களது பணியை செய்யலாம் என்றும் தெரிவித்தனர்.  

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் சமூக இடைவெளி பிரச்னை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் அப்படியானால் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியது தானே? என்று கேள்வி முன்வைத்தனர். தொடர்ந்து பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும் எப்படி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவுகளை பிறப்பித்தனர். அப்போது, அரசு தரப்பில் பதில்தர ஒரு நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியதால் வழக்கு விசாரணை நாளை (இன்று) தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும். எப்படி வழங்குவது என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

Related Stories: