புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்குச் சென்றிருக்கும் புலம்பெயர் தொழிலாளிகளில் மூன்றில் இரண்டு பேர், தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீண்டும் நகரங்களுக்குத் திரும்புவார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறியிருக்கிறது.
கொரோனா பரவலால் தேசிய அளவிலான ஊரடங்கு, வேலையிழப்பு, பொருளாதாரச் சிக்கல் காரணமாக வெளிமாநிலங்களில் தங்கி வேலை செய்யும் பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள். இதனால் நகரங்களில் பல இடங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் அவர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒடிசா போன்ற மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் அவர்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் 85 சதவிகிதம் பேருக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கிறது. 71 சதவிகித வீடுகளுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்.பி.ஜி சிலிண்டர் கிடைக்கிறது. இதனால் அவர்கள் நகரங்களுக்குத் திரும்புவார்களா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இதன் அடிப்படையில் புதிய ஆய்வு ஒன்று 11 வடமாநிலங்களில் எடுக்கப்பட்டது. இவர்களில் கொரோனா சூழல் காரணமாக 74 சதவிகிதம் பேர் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் 29 சதவிகிதம் பேர் மீண்டும் நகரங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், நகரங்களுக்குத் திரும்ப 45 சதவிகிதம் பேர் காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆய்வு ஜூன் 24 முதல் ஜூலை 8 வரையுள்ள காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஏப்ரலில் 4200 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதேபோல் தகவல் கிடைத்தது. தற்போதும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.