24 மணி நேர பாதிப்பில் உலக அளவில் நம்பர்-1 சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவின் விளைவு இது: ராகுல் கிண்டல்

புதுடெல்லி: கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா நம்பர்-1 இடத்தை பிடித்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியை ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவால் கொரோனா பாதிப்பில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மேம்பட்டு இருக்கிறது’’ என்றார். இதற்கிடையே, இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. அதோடு கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் இந்தியாவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவையும் இந்தியா முந்தி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,511 பேரும், பிரேசிலில் 25,800 பேரும், பெருவில் 21,358 பேரும், கொலம்பியாவில் 11,470 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிப்பில் நம்பர்-1 இடத்தை இந்தியா எட்டியிருப்பதை காட்டும் புள்ளிவிவர புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் நேற்று பகிர்த்து பிரதமர் மோடியை கிண்டலடித்துள்ளார். அவர் தனது பதிவில், ‘‘சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவால் இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் மேம்பட்டு இருக்கிறது. பிரதமர்’’ என மோடி கூறிய வார்த்தைகளையே சுட்டிக்காட்டி கிண்டலடித்துள்ளார். கொரோனா மத்திய அரசு கையாளும் விதம் குறித்து ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: