பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டதாக காங்கிரஸ் சமூக வலைத்தளபிரிவு செயலாளரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று பொதுமக்களுடன் சேர்த்து, மக்கள் பிரதிநிதிகளை தாக்கி வருகிறது. நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சமூக வலைத்தளப்பிரிவு செயலாளர் ஆனந்த் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் அமித்ஷா குறித்து, அவதூறு செய்திகளை பரப்பியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பாஜ பிரமுகர்கள் உடனே கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் இரவு ஆனந்த் பிரசாத்தின் வீட்டில் அவரை கைது செய்தனர். பின்னர், கப்பன்பார்க் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர் மீது ஐ.பி.சி 153(ஏ)பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.