தனியார் ஊழியரிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் சிக்கினர்

ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனூர், ஸ்ரீசக்தி நகரை சேர்ந்தவர் உலகப்பன் (31). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 30ம் தேதி திருமுல்லைவாயல் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது, அந்த வழியாக இரண்டு பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் உலகப்பனை மிரட்டி, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து, உலகப்பன் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக, திருமுல்லைவாயல் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சென்னை வியாசர்பாடி சுந்தரம் தெருவை சேர்ந்த ஆனந்த் (23). ஆவடி அடுத்த அயப்பாக்கம் என்.எஸ்.சி போஸ் தெருவை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: