கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றம்: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியும், ஆயிரத்தை நெருங்கியும் வருகிறது. கடந்த 31ஆம் தேதி 1,310 பேரும் 1-ம் தேதி 1,120 பேரும் நேற்று 1,169 பேரும் நோயால் பாதிக்கப்பட்டனர். இது தவிரக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா பாதித்து 2 பேர் மரணமடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 68 வயதான கிளீட்டஸ் என்பவரும், ஆலப்புழாவைச் சேர்ந்த 52 வயதான சசிதரன் என்பவரும் மரணமடைந்துள்ளனர்.

இன்று கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 801 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 40 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 85 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 55 பேருக்கும் நோய் பரவியுள்ளது. இன்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 205 பேருக்கு நோய் பரவி உள்ளது. இந்த மாவட்டத்தில் 192 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 5 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை.

இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 15 பேருக்கு நோய் பரவியுள்ளது. 815 பேர் இன்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 15,282 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 11,484 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்ப் பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் இந்த பொறுப்பு தற்போது போலீஸ் வசம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த எஸ்பி தலைமையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமையில் இருப்பவர்கள் வெளியே செல்வது மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உட்பட நிபந்தனைகளை மீறுவது அதிகரித்து வருகிறது. எனவே இதுபோன்று நிபந்தனைகளை மீறுபவர்களைக் கண்டுபிடிக்க போலீஸ் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

Related Stories: