×

ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது: மத்திய நிதியமைச்சகம்

டெல்லி: ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் அதிகரித்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை. மத்திய அரசின் நேரடிப் பணப்பலன் பரிமாற்றம், நிதியுதவி மக்களை நேரடியாக சென்று சேர வேண்டும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு தேவை என்ற நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ரூபே டெபிட் கார்டு, ஓவர் டிராப்ட் ஆகியவையும் வழங்கப்படும்.ஜன்தன் திட்டத்தில் இதுவரை 40.05 கோடி வங்கி சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.1.30 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ஜன்தன் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு விபத்துக் காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியது. ஜன்தன் திட்டத்தில் கணக்கு வைத்துள்ளோர் கணக்கில் பணம் இல்லாமலே ரூ.10 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட் பெறும் வசதி அதிகப்படுத்தப்பட்டது. எந்த ஒரு வீட்டிலும் வயது வந்தோர் ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டது.



Tags : bank account openers ,Jantan ,Federal Ministry of Finance ,Jan , Jan dhan project, the bank account
× RELATED ‘ஜன்தன்’ வங்கி கணக்கு 50 கோடியை தாண்டியது: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்