×

பேரறிவாளன் உடல்நிலை சீராக உள்ளதால் தற்போதைக்கு பரோல் தேவையில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!!

சென்னை: பேரறிவாளன் உடல்நிலை சீராக உள்ளதால் தற்போதைக்கு அவருக்கு பரோல் வழங்க தேவையில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் மனு அளித்திருந்தார். மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் கொரோனா தாக்கம் தொடங்கிய காலத்திலேயே மனு கொடுத்திருந்தார். ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பேரறிவாளன் உடல்நிலை சீராக இருப்பதால் தற்போதைய நிலையில் அவருக்கு பரோல் வழங்க அவசியமில்லை என்றும், ஏற்கனவே 2019ல் தான் அவர் பரோல் பெற்று வெளியில் சென்று மீண்டும் சிறையில் வந்திருக்கிறார். எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவருக்கு பரோல் குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு பேரறிவாளன் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றால் அவர் உடல்நிலை மோசமாகி ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்ட பிறகு தான் அவரது பரோல் மனு பரிசீலிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக உரிய விளக்கத்தை அளிப்பதற்கு தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பன்னாட்டு விசாரணை அமைப்பின் அறிக்கைக்காக காத்திருப்பதாக கடந்த முறை தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி அந்த விசாரணையின் தற்போதைய நிலை என்ன, அவை செயல்பாட்டில் இருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கினை மீண்டும் ஒத்திவைத்திருக்கிறார்கள்.

Tags : Perarivalan ,Tamil Nadu , parole, Perarivalan, Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...