சென்னை: மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்திலும் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யகோரிய வழக்கில் தமிழக அரசு தற்போது இந்த பதிலை அளித்துள்ளது. இந்த சரபங்கா திட்டம் என்பது சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் போது, திறந்து விடக்கூடிய உபரி நீரானது, வீணாக கடலில் கலக்கிறது.
அவ்வாறு வீணாகும் நீரை, ஏரி, குளங்களில் நிரப்பி விவசாயம் செழிக்க சரபங்கா நீரேற்று பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து இந்த மேட்டூர் சரபங்கா நீரேற்றத்திற்காக சுமார் 565 கோடி செலவில் பணிகள் அமையவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாயாரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சரபங்கா திட்டமானது மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்கும் என்றும், உடனடியாக அரசாணையை ரத்து செய்ய வேண்டியும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி, மேச்சேரி, வனவாசி, ஜலகண்டபுரம், கொங்கனாபுரம், மகுடஞ்சாவடி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதனால் இந்த சரபங்கா திட்டம் எந்த விதத்திலும் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.