×

மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டியது தானே? நீதிபதிகள் கேள்வி

சென்னை: மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டியது தானே? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்விகளை விளாசியுள்ளனர். டாஸ்மாக்கில் தனிமனித இடைவெளியுடன் மது விற்கும் போது மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா? என்றும் வினவியுள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து மாணவர்களையும் அழைத்து முட்டை வழங்க சாத்தியம் இல்லை என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாது என்பதால் முட்டை வழங்க சாத்தியம் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முட்டை, நாப்கீன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 30ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எப்படி முட்டை, நாப்கின் வழங்கப்பட உள்ளது என்பதை ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அனைத்து மாணவர்களையும் அழைத்து முட்டை வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் பள்ளிகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்க முடியாது என்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை மாணவிகளுக்கு 21.50 லட்சம் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக்கில் தனிமனித இடைவெளியுடன் மது விற்கும் போது மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா? முட்டை வழங்க முடியாது என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டியது தானே? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், முட்டை வழங்க என்ன திட்டம் இருக்கிறது என்பதை நாளை தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.



Tags : Tasmac ,judges ,High Court Judges , Egg, Tasmac, High Court Judges
× RELATED திண்டுக்கல் அருகே மது விற்ற 7 பேர் கைது