×

திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்கு திறக்க அனுமதி அளிக்க தற்போது வாய்ப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி: தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்பு தொடங்கவும் திரையரங்குகளைத் திறக்கவும் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளனர். எனவே, கொரோனா ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். நாள்தோறும் குறைந்தபட்சம் 2 காட்சிகளுக்காவது அனுமதியளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது.  இந்நிலையில், திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்கு திறக்க அனுமதி அளிக்க தற்போது வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், திரைப்பட படப்பிடிப்பு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது. 60 பேர் இருந்தாலே போதும். ஆனால் திரைப்பட படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும். அந்த பகுதியில் பார்வையாளர்கள் கூட்டம் கூடும். அதுதவிர திரைப்பட படப்பிடிப்பு நடத்த பல்வேறு அனுமதி வாங்க வேண்டியுள்ளது. அதனால் இப்போதைக்கு அனுமதிக்க இயலாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார். திரையரங்கு திறப்பு குறித்து மத்திய அரசு இதுவரை முடிவு சொல்லவில்லை. எனவே இந்த மாதம் திரையரங்கு திறக்க திறக்க வாய்ப்பில்லை, என்று கூறியுள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் இந்த அறிவிப்பு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Kadampur Raju ,theater ,film shooting , Film shooting, theater, Minister Kadampur Raju
× RELATED மக்களவைத் தேர்தலை முன்னிட்டு...