×

மரங்கள் சூழ தமிழர் கோயில்கள் அமைந்ததன் பின்னணி தெரியுமா? இயற்கை சூழல் காக்கும் காப்புக்காடுகள்

மதுரை: தமிழகத்திலும், இலங்கையிலும் இயற்கைச்சூழலை கோயில் காப்புக்காடுகள் பாதுகாத்து வருகின்றன.   நம் முன்னோர்கள் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் என பலவற்றை வெட்டி அதில் தேக்கிவைத்தனர்.   மாதம் மும்மாரி மழைபொழிய ஊர்தோறும் கோயில்களையும், அவற்றைச்சுற்றி காடுகளையும், தமிழர்கள் உருவாக்கி வைத்தனர். இதனால் கோயில்களும், வழிபாடுகளும், காடுகளும், நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதை பாதுகாப்பதாகவும் இருந்தன. மருத்துவ குணமுள்ள பல மூலிகைத் தாவரங்களை பெருக்கவும், இயற்கைச் சூழலை பாதுகாக்கவும் தமிழர்கள் பழங்கால கோயில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர்.

இத்தகைய காடுகள் காப்புக்காடுகள் எனப்படுகின்றன. அடர்ந்த காட்டுப்பகுதியில் மரங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களின் ஆதி ஆலயங்கள், பின்  மண்தளிகளாகவும், செங்கல் தளிகளாகவும், குடைவரை கோயில்களாகவும் காலத்திற்கேற்ப உருமாற்றம் பெற்றன. இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர்  வே.ராஜகுரு கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில் காடுகள் அவ்வூர்களின் இயற்கையை பாதுகாக்கும் சூழியல் மண்டலங்களாகவே உருவாக்கப்பட்டன. இக்காடுகள் பருவமழையை வரவழைத்தல், மருத்துவ மூலிகைகள் தருதல், பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் என பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன. இக்கோயில் காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாக கருதுவதால், அவற்றை கோயில் பணிகளுக்காகக்கூட வெட்டுவதில்லை. பல இடங்களில் இதை ஊர்க்கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள்.

 கோயிலில் பொங்கல் வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையை பாதுகாக்க நம் முன்னோர்கள் உருவாக்கிய வழிமுறைகளாகும். ஐயனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோயில்கள், மரங்கள் சூழ்ந்த காப்புக்காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன. மேலும் பெரிய கோயில்களில் நந்தவனம் என்ற பெயரிலும் மரங்கள் நிறைந்த காடுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்தொடர்ச்சியாக பெருங்கோயில்களில் தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கும் வழக்கமும் வந்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமக்கோயில்கள், முக்கியமாக ஐயனார், காளி கோவில்கள், உகாய், ஆதண்டை, ஆத்தி, மணிபூவந்தி, தாழை, நாட்டுவீழி, சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகை தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஐயனார் கோயில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பார்த்திபனூர் அருகில் கீழ்ப்பெருங்கரை ஐயனார் கோயில், நரிப்பையூர் செவக்காட்டு ஐயனார் கோயில், போகலூர் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் 20க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோயிலைச்சுற்றி காவல் நிற்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் பல அரியவகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக்கோயில்களில் காணமுடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  காடுகள் சூழ்ந்த ஆலயங்களை கொம்படி ஆலயங்கள் என அழைப்பதாகக்கூறிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர்  ஆ.மணிகண்டன் கூறுகையில், ‘‘கந்தர்வக்கோட்டை ஒன்றியம் மங்கனூர், நத்தமாடிப்பட்டி கிராம எல்லையில் உள்ள வீசிக்காடு, கீழவாண்டான்விடுதி சிவனார் திடல்,  குன்றாண்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் வாட்டாருடையார் கோவில், வளத்தாரப்பன் கோயில் சிட்டை, அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள வெள்ளாஞ்சாறு புலிக்குத்தி அய்யனார் கோயில் காடு, உள்பட இம்மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இங்கு குருந்தமரம், வெப்பாலை, உசிலை, வீரமரம், நெய்க்கொட்டான், வெள்வேலம், காட்டத்தி, கிளுவை உள்ளிட்ட பல்வேறு மர வகைகள் இக்காடுகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன’’ என்கிறார். இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் அருகிலுள்ள யாளக்காட்டில் ஆயிரக்கணக்கான உகாய் மரங்கள் வளர்ந்துள்ளதாகத தெரிவித்த இலங்கை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம், ‘‘மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமங்க ஈஸ்வரம், மண்டூர் கந்தசுவாமி கோயில், செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில், களுதாவளை பிள்ளையார் கோயில், கோராவெளி அம்மன் கோயில் ஆகியவையும், அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில், திருகோணமலை மாவட்டத்தில் சேனையூர் நாகதம்பிரான் கோயில், கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் கோயில், கேகாலை மாவட்டத்தில் அம்பன்பிட்டிய கந்தசுவாமி கோயில் ஆகியவையும் சோலைகளின் மத்தியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களாகும். இங்கு மருதமரம், மாமரம், தென்னைமரம், வேப்பமரம், பனைமரம் ஆகிய மரங்கள் வளர்ந்துள்ளன’’ என்றார்.
இத்தகைய கோயில் காப்புக்காடுகளை மக்கள் அனைத்துக்கோயில்களில் தொடர்ந்து  வளர்த்து இயற்கையை பாதுகாத்து மழைவளம் பெறுவது அவசியம்.

Tags : Tamil ,temples , Trees, Tamil temples, nature, forests
× RELATED தைரிய வீரத்திற்கு வீரமாகாளியம்மன்