தென்காசி: குற்றாலத்தில் மனதுக்கு இதமான சூழலுடன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. குற்றாலத்தில் நேற்று முன்தினம் ஊருக்குள் குறிப்பிடத்தக்க அளவில் மழை இல்லாதபோதும், மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அருவிகளில் சிறிதளவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்றும் வெயில் அவ்வளவாக இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மனதுக்கு இதமான குளுகுளு தென்றல் காற்று வீசியதோடு மெயினருவியில் ஆண்கள், பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அருவிகளில் யாரையும் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை.